சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் கருணாநிதி நேரில் ஆஜர்.. அவதூறு வழக்கில்.. மார்ச் 10-க்கு ஒத்திவைப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாநிதி கோர்ட்டுக்கு வந்ததால் திமுகவினர் பெரும் திரளாக கூடி விட்டனர். இந்த வழக்கின் விசாரணை பின்னர் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
4 ஆண்டுகளில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் கட்டுரை வெளியிட்டது. இந்த கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார்.

இதையடுத்து, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
அவரது சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில், முரசொலி நாளிதழில், அதிமுக ஆட்சி குறித்து கலைஞர் கேள்வி-பதில் செய்தி வெளிவந்தது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. முதல்வருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே செய்தியை கொடுத்த கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைப் பரிசீலித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18ம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கருணாநிதிக்கும், முரசொலி செல்வத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் கருணாநிதி நேரில் ஆஜரானதில்லை. இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் மட்டும் அவர் நேரில் ஆஜராக முடிவு செய்தார். நானே நேரில் ஆஜராவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வழக்கை விசாரிக்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்ற வளாகத்தில் முதல் மாடியில் உள்ளது. மேலே செல்ல லிப்ட் வசதி உண்டு. இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டுக்கு வருகை தந்தார் கருணாநிதி. பின்னர் பத்து மணியளவில் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார். கருணாநிதியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தார். முரசொலி செல்வமும் ஆஜரானார்.
கருணாநிதி சார்பில் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ஆலந்தூர் பாரதி, கிரிராஜன், குமரேசன், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமான பேர் ஆஜராகினர். பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கருணாநிதி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான சோதனைக்கு பிறகே வழக்கறிஞர்களும், அது தொடர்பானவர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோர்ட் வளாகத்திற்கு வெளியே திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications