தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் கருணாநிதி..!
சென்னை: 14வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னையில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை பிரசாரத்தைத் தொடங்கிய கருணாநிதி, தொடர்ந்து வேனில் பயணித்தபடி மரக்காணத்தை சென்றடைகிறார். அங்கு அவர் வேனிலிருந்தபடி பேசுகிறார். இரவு 7.30க்கு புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் கருணாநிதி, திங்கள்கிழமை, அதாவது ஏப்ரல் 25ம் தேதி திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு கடலூர் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் வேனில் இருந்தபடியும் பேசும் கருணாநிதி, மாலை 6.30 மணிக்கு சீர்காழியில் வேனில் இருந்தபடி பேசி வாக்கு சேகரிக்கிறார். இரவு 7.30 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார்.
25ம் தேதி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
26ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சை பொதுக்கூட்டத்திலும், 27 இரவு 7 மணிக்கு திருச்சி பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பேசுகிறார்.
28ம் தேதி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மே மாதம் 2ம் தேதி நெல்லையில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 3ம் தேதி விருதுநகர், மதுரை மாவட்டங்களில் , 5ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
7 காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களிலும், 8 கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும், 9 ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும், 12 தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னையிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார் கருணாநிதி.
சிறப்பு வேன்
கருணாநிதி பிரசாரம் செய்வதற்கு வசதியாக சகல வசதிகளுடனும் கூடிய பிரத்யேக வேன் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வேனில்தான் தமிழகத்தைச் சுற்றி வரப் போகிறார் கருணாநிதி.