கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? பின்னணி என்ன?
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. தமிழக அரசு கடைசி நேரத்தில் பின் வாங்கியதற்கு 5 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்பட்டது.

வெற்றி வெற்றி
கிட்டத்தட்ட மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்யலாமா, வேண்டாமா என்ற பிரச்சனை 14 மணி நேரம் நடந்தது. 7ம் தேதி இரவு போடப்பட்ட வழக்கு மறுநாள் காலை விசாரிக்கப்பட்டு, காலை 11 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. திமுகவின் போராட்டம் வெற்றிபெற்று, கருணாநிதி அண்ணாவிற்கு அருகிலேயே புதைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கேவியட் மனுதாக்கல்
ஆனால் தமிழக அரசுக்கு இதில் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு இருந்தது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் என்றுதான் எதிர்பார்க்கவும்பட்டது. இதையடுத்து திமுக வேகமாக செயல்பட்டு உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதத்தையும் கேட்கவேண்டும் என்று முறையீடு செய்தது.

ஆனால் செய்யவில்லை
ஆனால், தமிழக அரசு ஆச்சர்யமாக இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை. கடைசி நேரத்தில் எந்த மேல்முறையீடும் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறது. அதேபோல் மெரினாவில் அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

என்ன காரணம்
இதற்கு சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
1. தமிழகம் முழுக்க, தமிழக அரசுக்கு எதிராக இந்த விஷயத்தில் மக்கள் ஒன்று கூடினார்கள். சில அதிமுகவை சேர்ந்த நபர்களும் கூட, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்கள். இது அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தது.
2. இந்த விஷயம் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்து இருக்கிறது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியிருக்கும் அரசு இன்னொரு பிரச்சனையில் சிக்க விரும்பவில்லை.
3. இந்த விஷயம் இவ்வளவு பெரிய அளவில், இந்தியா முழுக்க விவாதிக்கப்படும் என்று அரசு நினைக்கவில்லை. முக்கியமாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நினைக்கவில்லை. மமதா பானர்ஜி தொடங்கி ரஜினிகாந்த் வரை இந்தியா முழுக்க கருணாநிதிக்காக ஒருமித்த குரல் கொடுத்தது பெரிய அழுத்தமாக மாறியது.
4. அதேபோல் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்றால் அது தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று ஆளும் கட்சிக்கு தெரிந்துள்ளது. எம்ஜிஆர் ரசிகர்களே கோபத்தில் இருப்பார்கள் என்று தெரிந்த பின் பின்வாங்கி இருக்கிறார்கள்.
5. கடைசியாக இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மேல்முறையீடு செய்தாலும், உச்ச நீதிமன்றத்திலும் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்திய அவப்பெயர்தான் உருவாகும் என்பதால், மேல்முறையீடு செய்யாமல் விட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications