கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.. நடிகை ராதிகா
கருணாநிதி சமாதியில் நடிகை ராதிகா அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா குடும்பத்தினருக்கும், கருணாநிதியின் குடும்பத்திற்கும் நீண்ட பந்தம் தொடர்ந்து வருகிறது. நடிகவேள் எம்.ஆர்.ராதா மீது அதிக மரியாதை கொண்டவர் கருணாநிதி. கலைஞர் என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியதே எம்.ஆர்.ராதாதான். எம்.ஆர்.ராதா மறைவுக்கு பின்னர், ராதாரவி, ராதிகா உள்ளிட்டோர் கருணாநிதி குடும்பத்தினருடன் நெருங்கி பழகியதுடன், திமுகவின் மீதும் பற்று வைத்தவர்கள்.
உச்சரிப்பில் கவனம்
கருணாநிதி வசனம் எழுதிய பல படங்களில் ராதிகா நடித்துள்ளார். கருணாநிதியின் வசனங்களை உச்சரிக்க நிறைய மெனக்கெடுவதாக ராதிகாவே நிறைய முறை சொல்லி இருக்கிறார். இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் குன்றி காவேரி மருத்துவமனையில் அனுமதித்தபோது, ஏராளமான திரைப்பிரபலங்கள் வந்து சென்றனர்.
சிங்கப்பூரில் ராதிகா
ஆனால் தன் மகன் ராகுலை பள்ளியில் சேர்க்க சிங்கப்பூர் சென்றுவிட்டதால், ராதிகாவால் மருத்துவமனையில் வந்து பார்க்க முடியவில்லை. ஆனாலும் கருணாநிதியின் 11-வது நாள் சிகிச்சையின்போது, தனது ட்விட்டர் "கலைஞரின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக உள்ளது. அவருக்காகவும், அவரது குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
கருப்பு தினம்
மறுநாள் கருணாநிதி மறைந்தவுடன், கருணாநிதி மறைந்த இந்த நாள் கருப்பு தினம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அத்துடன், தனது ட்விட்டர் பக்கத்தின் புரொபலை பக்கத்தை கருப்பாக மாற்றி கவர் பேஜில் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வைத்திருந்தார்.
ஸ்டாலினை சந்தித்து ஆறுதல்
இந்நிலையில் சென்னை திரும்பிய ராதிகா, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று தன் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்.
அதன்பின்னர், கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு ராதிகா சென்றார். அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழை ஆழமாக விதைத்தவர்
பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ராதிகா கூறும்போது, "நான் வெளிநாட்டில் இருந்தேன். நேற்றிரவுதான் சென்னை வந்தேன். கோபாலபுரம் வீட்டுக்கு வந்தவுடனே எனக்கு ஏதோ வெறிச்சோடி உள்ளது போல தோன்றுகிறது. இந்த வீட்டுக்கு பலமுறை நான் குடும்ப ரீதியாக வந்து சென்றிருக்கிறேன். இனிமேல் தமிழகத்தில் அரசியலே வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அனைவரது மனதிலும் தமிழர் என்ற உணர்வை ஆழமாக விதைத்தவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" இவ்வாறு ராதிகா கூறினார்.