ம.க.இ.க. பாடகர் கோவன் தேச துரோக சட்டப் பிரிவில் கைது- கருணாநிதி, திருமாவளவன் கண்டனம்
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் தேச துரோக சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்களை திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.
அ.தி.மு.க. அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
இதேபோல் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கோவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் பாடகரும், வீதி நாடகக் கலைஞருமான கோவன், தமிழக அரசால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நாடு முழுவதும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசே ஒரு பாடகரின் மீது அடக்குமுறையை ஏவுகிறது. வகுப்புவாத சக்திகளுக்கும் அரசுக்கும் வேறுபாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழக அரசின் மக்கள் விரோத மதுக் கொள்கையை எதிர்த்து, 'மூடு டாஸ்மாக்கை மூடு' எனும் பாடலை இயற்றிப் பாடி, வீதியெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், கோவன் அவர்கள். கருத்தாழம் மிகுந்த அந்தப் பாடல் பொதுமக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதே, அரசின் கோபத்திற்கு காரணமாகும்.
மதுக்கடைகளை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஒடுக்கியதுபோல், இப்போது ஒரு பாடகரையும் ஒடுக்க முனைகிறது தமிழக அரசு. அரசை எதிர்த்து அற வழியில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் போக்கை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
கோவன் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications