ஒரே வாரத்தில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் அழகிரி மீண்டும் சந்திப்பு! நலன் விசாரித்தார்
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மு.க.அழகிரி.
சென்னை, கோபாலபுரத்தில் இன்று காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் கருணாநிதியை அழகிரி சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அழகிரி, கருணாநிதி தற்போது நலமோடு இருப்பதாக தெரிவித்தார். கடந்த மாதம் 27ம் தேதி, கருணாநிதியை அழகிரி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில், ஒரே வாரத்தில் மீண்டும் இருவரும் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புகள் தொடரும் நிலையில், திமுகவிலிருந்து அழகிரியை விலக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மறு பரிசீலனை செய்யப்படலாம் என மகிழ்ச்சி வெளிப்படுத்துகிறார்கள் மதுரையிலுள்ள அழகிரி ஆதரவாளர்கள்.
வழக்கமாக கருணாநிதி உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் என்றும், அவர் ஓய்வெடுக்க கூறி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.