சென்னையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை இன்று மாலை தொடங்க உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 4 தொகுதிகளிலும், மக்கள் தே.மு.தி.க. 3 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாய தொழிலாளர் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். முதல் கட்ட பிரசாரத்தை கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று காஞ்சீபுரத்தில் நிறைவு செய்தார். 2-ம் கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திருவள்ளூரில் தொடங்குகிறார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் இருந்து தொடங்குகிறார். சென்னை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து வேன் மூலமாகச் சென்று மாலை 6 மணிக்கு மரக்காணத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிறகு இரவு 7.30 மணிக்கு புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். இரவு புதுச்சேரியில் தங்கும் கருணாநிதி, ஏப்ரல் 24-ஆம் தேதி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஏப்ரல் 25-ஆம் தேதி தான் மீண்டும் போட்டியிடும் திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.தனது சுற்றுப் பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும், வேனில் இருந்தபடியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.












Click it and Unblock the Notifications