அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்..விரைவில் திமுக ஆட்சி மலரும்: திருச்சியில் கருணாநிதி நம்பிக்கை
திருச்சி: இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்று திருச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 5 வது நாளாக பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். இதனிடையே நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல, திமுக வெறும் அரசியல் இயக்கம் அல்ல. சமுதாயத்தில் அக்கறை கொண்ட சமூக இயக்கம். திமுக.,வை அழிக்க யாராலும் முடியாது.

மக்களைப் பார்ப்பதே பாவம் என்று கருதி, வீட்டுக்குள் இருந்து ஆட்சி நடத்தும் ஜெயலலிதா, தேர்தல் வந்தவுடன், மக்களுக்காக வாழ்கிறேன் எனக் கூறி பொய் வேடம் போடுகிறார். ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கிறார். அவரின் மோசடி பிரசாரத்திற்கு, தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத்தில் இருண்ட ஆட்சியை அகற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அடுத்த சில வாரங்களில், தேர்தல் முடிவடைந்து, திமுக ஆட்சி மலரும். அராஜகம் நிறைந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக, அந்த ஆட்சி அமையும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது உறுதி. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கை சின்னத்திலும் மற்றும் ஏனைய தோழைமை கட்சிகளுக்கும் அவரவர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications