கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலி.. சட்டசபை செயலகம் அறிவிப்பு
திருவாரூர் தொகுதி காலி என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து, அவரது சட்டமன்ற தொகுதியான திருவாரூர் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது
மறைந்த திமுக தலைவரின் விருப்பமான தொகுதி திருவாரூர். அவர் பிறந்த பூமி. பல்வேறு சரித்திர சான்றுகளை கருணாநிதிக்கு பெற்று தந்த தொகுதி. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று இந்த தொகுதியின் நாயகனாகவே இருந்து கடந்த 7-ம் தேதி மறைந்து போனார்.

பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்துவிட்டால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும். சமீபத்தில்கூட திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே. போஸ் மறைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கருணாநிதியின் மறைவு குறித்து தகவல் சட்டசபை செயலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் தற்போது முறைப்படி தெரிவித்துள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு ஆணையையும் சபாநாயகர் தனபால் வெளியிட்டார்.
இதனை தேர்தல் துறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால் அதற்கான வேலையை இனி தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் அடுத்த பிரதிநிதி யார் என்ற கேள்விகள், விவாதங்கள் கிளம்பி விட்டன.












Click it and Unblock the Notifications