கலிங்கப்பட்டியில் என்னை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் வைகோவின் தாயார்: கருணாநிதி
சென்னை: கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், எனது அன்னையைபோல வைகோவின் தாயாரும் அன்றாட அரசியலை புரிந்து வாழ்ந்தவர் என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரியம்மாளின் இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.
வைகோவின் தாயாரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்கள் மறைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறேன் என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி மாரியம்மாள், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
வைகோ தாயார் மாரியம்மாள் மறைவு இரங்கல் !ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி ...
Posted by Kalaignar Karunanidhi onThursday, November 5, 2015
எனது அன்னையாரைப் போலவே வைகோவின் அன்னையாரும் அன்றாட அரசியலைப் புரிந்து கொண்டு வாழ்ந்தவர். குறிப்பாக வைகோவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும், ஆதரவாகவும், அரவணைப்பாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் விளங்கியவர் அன்னையார் மாரியம்மாள். அவரது மறைவினால் வாடும் வைகோ, மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
ஸ்டாலின் இரங்கல்
வைகோ தாயார் மாரியம்மாள் மறைவுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வைகோவின் தாயார் மறைவு கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், வைகோவுக்கு அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவரின் மறைவு பேரிழப்பு என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இறுதி மூச்சு வரை திராவிட இயக்க சிந்தனைகளுடன் வாழ்ந்தவர். அவரது மறைவினால் துயரமடைந்துள்ள வைகோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.