கருணாநிதி நலம்... நாளை டிஸ்சார்ஜ்- கனிமொழி தகவல்
திமுக தலைவர் கருணாநிதி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவரது மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் 7 ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.
கருணாநிதிக்கு கடந்த 15ம் தேதி மீண்டும் உடல்நலத்தில் பாதிக்கப்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையை தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உடல் நலம் பெற்று தொலைக்காட்சி பார்க்கும் கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்டது.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நாளை வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜாகி வீடு திரும்புவார் என்று அவரது மகள் கனிமொழி கூறினார். கருணாநிதியின் உடல் பூரணமாக குணமடைந்து விட்டதாகவும் கனிமொழி தெரிவித்தார்.