45–வது நினைவு நாள்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர் அஞ்சலி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 45-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி புறப்பட்டது.

பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், சற்குணபாண்டியன், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா தா.மோ. அன்பரசன், எ.வ.வேலு, செல்வராஜ் எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். பெருந்திரளான திமுக தொண்டர்களும் அவர்களை பின் தொடர்ந்து அணி வகுத்து சென்றனர்.
காமராஜர் சாலையை பேரணி அடைந்ததும் அண்ணா சதுக்கத்தில் உள்ள நினைவிடத்தில் கருணாநிதி மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விஜயகாந்த் மலர்தூவி மரியாதை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ.,க்கள் வி.சி.சந்திரகுமார், டி. சுபமங்களம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் க. செந்தாமரைக் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி. யுவராஜ், மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம். காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications