கருணாநிதி நினைவேந்தல்: விடுபட்ட மிக முக்கியமான தலைவர்கள்.. கிளம்பிய சர்ச்சை!
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பல முக்கியமான தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பல முக்கியமான தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாதது, திமுகவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு சில முக்கிய தலைவர்கள் வர உள்ளனர்.
ஆக.30 நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர்கள்
இதில் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கருணாநிதிக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. ப. சிதம்பரம் கலந்துகொள்ளவில்லை. திமுகவில் இருந்த குஷ்புவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த எந்த காங்கிரஸ் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
முக்கிய மூன்று பேர்
அதேபோல் திமுக கட்சிக்கு நெருக்கமாக இருக்கும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும், மூன்று முக்கிய தலைவர் அழைக்கப்படவில்லை. கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அழைக்கப்படவில்லை. மமதா பானர்ஜி கண்டிப்பாக அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இல்லை.
எந்த முறை
அதே சமயம் எல்லா கட்சி சார்பாகவும் ஒரு பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என்று சில முக்கியமான கட்சிகளில் இருந்து பிரதிநிதிகள் போல ஒருவர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இதன் காரணமாக, அதே கட்சியில் இருக்கும் மற்ற தலைவர்கள் அழைக்கப்படாமல் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும்கட்சி மற்றும் தமிழக கட்சிகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள், தமிழக பாஜக தலைவர்கள், தொல்.திருமாவளவன்,ஈவிகேஎஸ் இளங்கோவன், ராமதாஸ், அன்புமணி, கமல்ஹாசன் என்று யாருமே இந்த நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம்பெறவில்லை. கருணாநிதி மறைவின் அன்று யாரிடமும் சரியாக பேச முடியவில்லை என்றுதான் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர், ஆனால் அதே நிகழ்ச்சிக்கு தற்போது முக்கியமான தலைவர்கள் அழைக்கப்படாமல் போய் உள்ளனர்.