ராஜ்யசபா எம்.பி பதவி.. திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி போட்டி
சென்னை: ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கு திமுக தனது 2 வேட்பாளர்கள் பெயரை இன்று அறிவித்துள்ளது. கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது.

மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜுன் 29ல் காலியாக உள்ளன. ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோர்தான் பதவி காலம் முடிவடைய போகும் தமிழக எம்.பிக்களாகும்.
இந்த பதவி இடங்களுக்கு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். ஒரு ராஜ்யசபா எம்பிக்கு, 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அந்த வகையில் 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் நிச்சயம்.
ஒருவேளை, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக ஜெயித்தால் 4 உறுப்பினர்களை அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்நிலையில் திமுக தனது 2 வேட்பாளர்கள் பெயரை இன்று அறிவித்துள்ளது. கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications