நான் தோலைத் தானே சாப்பிட்டேன்... சுளையை சாப்பிட்டவர்களுக்கு என்ன தண்டனை ? - 'அக்ரி'க்காக கருணாநிதி
சென்னை: பதவி பறிப்பு மூலம் திருநெல்வேலி விவசாய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலியில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்றும், அவர் மீது அ.தி.மு.க., அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம் என, கூறியிருந்தேன். அது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆமாம். நடவடிக்கை எடுக்கா விட்டால், என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டே, வேறு வழியின்றி அவரிடமிருந்து, கட்சி பதவியையும், அரசு பதவியையும், அ.தி.மு.க., பறித்துள்ளது.
இதிலிருந்து, அந்த மூத்த அதிகாரியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது தெளிவாகப் புரிந்து விட்டதல்லவா? ஆனால், பதவிகளைப் பறி கொடுத்தவர்கள், 'அதிகாரியின் சாவுக்கு நான் மட்டுமா காரணம், நான் தோலைத் தானே சாப்பிட்டேன். உண்மையில் சுளையை சாப்பிட்டவர்களுக்கு, எந்த தண்டனையும் கிடையாதா' என கேட்கின்றனர்.
ஏற்கனவே, ஒரு முறை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, ஏதோ தவறு செய்தார் என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டது. எதற்காக எடுக்கப்பட்டது. பிறகு, ஏன் கொடுக்கப்பட்டது என்பதெல்லாம், இந்த ஆட்சியில் வேடிக்கை தான்.
கொலு கொண்டாடுபவர்கள் வைக்கப்படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி வைப்பது போலத்தான், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications