டி.எஸ்.பி தங்கவேலுவை தப்ப வைக்க முயற்சி… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: கருணாநிதி
சென்னை: செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் கலால் டி.எஸ்.பி., தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மரக் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கும், போலீசாருக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே வெளிப்படையாகச் சொன்ன டி.எஸ்.பி., தங்கவேலு, இப்போது திடீரென என்ன காரணத்தாலோ முன்பு கூறியதை மாற்றிக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன், செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் கலால் டி.எஸ்.பி., தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி வழக்கையே தள்ளுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரி சாட்டிய குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் டி.எஸ்.பி. தங்கவேலுவும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.எனவே செம்மரக் கடத்தலில் தங்கவேலு தொடர்பான நிகழ்வுகள் பற்றிய உண்மை உலகத்துக்குத் தெரியவும், குற்றவாளிகள் தப்பிக்காமல் சட்டத்தின் கடுமையான பார்வைக்குக் கொண்டு வரப்படவும், செம்மரக் கடத்தல் வழக்கினை சிபிஐ விசாரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதிமுக அரசு உடனடியாக இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
செம்மரக் கடத்தல் சம்பந்தமாக அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிகழ்வு, இரண்டு மாநிலங்கள் தொடர்புடையது என்பதால், சிபிஐ விசாரிப்பது தான் நியாயமாக இருக்கும் என வலியுறுத்தி வருகிறோம். இப்போது தங்கவேலு தொடர்பானதும், செம்மரக் கடத்தல் என்பதால் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயமான முறையில் நடக்கவும், உண்மை வெளிச்சத்துக்கு வரவும் உதவிடும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications