அழகிரி... நீக்கத் தயங்க மாட்டேன்... எச்சரிக்கையுடன் நிற்காமல் சொன்னதைச் செய்த கருணாநிதி
சென்னை: அழகிரியாகவே இருந்தாலும் சரி, கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாக யார் நடந்தாலும் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன்புதான் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அன்று சொன்னதை இன்று அதிரடியாக நிறைவேற்றி, கட்சியில் தான் தான் பாஸ் என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
இதுகாலம் வரை மு.க.அழகிரி தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து அமைதியுடன் கையாண்டு வந்த கருணாநிதி முதல் முறையாக அதிரடியாக இறங்கியிருப்பதால், திமுகவினரே சற்று அயர்ந்து போயுள்ளனராம். அதேசமயம், அழகிரிக்கு இப்படிப்பட்ட 'ஒய்வு' அவசியம்தான், அப்போதுதான் அவர் நிதானத்துக்கு வருவார் என்றும் அவர்கள் கருணாநிதியின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள்.
மு.க.அழகிரி, மு.க.ஸ்டா்லின் பிரச்சினை திமுகவில் நிலைத்துப் போன ஒன்றாக மாறி பல காலமாகி விட்டது. அவ்வப்போது பூசல் வருவதும், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தலையிட்டு சமாளித்து விடுவதுமாக இத்தனை நாட்கள் போய்க் கொண்டிருந்தன.
ஆனால் சமீப காலமாக அழகிரியின் அட்டகாசம் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிடம் கடுமையாகப் பேசி வந்ததாக தெரிகிறது. இதையடுத்தே அழகிரி விஷயத்தில் கருணாநிதி கடுமை காட்டத் தொடங்கினார் என்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு அழகிரியிடம் சற்று கடுமையாக நடக்கத் தொடங்கிய கருணாநிதி, சில நாட்களுக்கு முன்புதான், மு.க.அழகிரியாகவே இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறக் கூடாது, முடிவுகளை விமர்சிக்கக் கூடாது. அப்படி செய்வது வரம்பு மீறிய செயல். கட்சியை விட்டு நீக்கக் கூடத் தயங்க மாட்டேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதை அழகிரி தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனால் கருணாநிதி தான் சொன்னது சீரியஸ் என்பதை நிரூபிப்பது போல இப்போது தற்காலிகமாக அழகிரியை நீக்கியுள்ளதன் மூலம் நிரூபித்துள்ளார். இதன் மூலம் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் யார் செயல்பட்டாலும் இதுதான் கதி என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.