மரியம் பிச்சையில் தொடங்கி சின்னையா வரையிலான அமைச்சரவை மாற்றம்
ஜெ. முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவருடன் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று அதன்பின் பதவி இழந்து மீண்டும் அமைச்சர்களாக வந்தவர்கள் கோகுல இந்திரா, ஆர்.பி. உதயகுமார், பி.வி. ரமணா, எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி. வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி உள்ளிட்டோர். இரண்டாவது முறையாக அமைச்சரவையில் வாய்ப்புக் கிடைத்தும், அதிலும் கோட்டை விட்டவர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி ஆகிய இருவர்தான். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் வந்த படத்தால் பதவி இழந்தார் பி.வி. ரமணா.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறை அமைச்சரவை பதவியேற்பு ஒரு முறை, ஜெ. பதவி பறிபோய் 2014 ஓ.பி.எஸ். தலைமையில் இரண்டாவது முறை, 2015ல் ஜெ. மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற போது மூன்றாவது முறை என மூன்று முறை ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவியேற்றது.
15-க்கும் அதிகமான முறை ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதுவும் ஒரு சாதனைதான்.
2011 முதல் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 23 முறை அமைச்சரவை மாற்றம் கண்டுள்ளது. மரியம் பிச்சையில் தொடங்கிய மாற்றம், கடந்த மாதம் நீக்கப்பட்ட சின்னையா வரை கிட்டத்தட்ட அரை சதம் எம்.எல்.ஏ.க்கள் இந்த ஐந்தாண்டுகளில் அமைச்சர் நாற்காலிகளில் அமர்ந்து சென்றுள்ளனர்" என்று ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறும் அமைச்சரவைப் பந்தாட்டம் பற்றி "ஜூனியர் விகடன்" கட்டுரை எழுதியுள்ளது.
அமைச்சர்கள் மாற்றம் பற்றி இவ்வாறு எழுதியதோடு இல்லாமல், பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றிச் சில ஏடுகள் எழுதுகின்றன.
குறிப்பாக ஜெயலலிதா அரசின் மூத்த அமைச்சர்கள் பற்றியும், அவர்களின் உதவியாளர்கள் பற்றியும், அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் பற்றியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிற சில செய்திகளைப் பாருங்கள்.