பந்தாடப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள்
மேலும் "ஜூனியர் விகடன்" இதழில் "5 ஆண்டுகள்.... 50 மந்திரிகள் - 23 தடவை பந்தாடப்பட்ட அமைச்சர்கள்" என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூட,
"2011ஆம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது அமைந்த அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து மொத்தம் 34 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். ஜூன் 27ம் தேதி முகமது ஜான், அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
மேலும், சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டன. முதலாவது அமைச்சரவை மாற்றம் நடந்த சில தினங்களிலேயே அடுத்த மாற்றத்தை நடத்தி அமைச்சர்களை நடுங்கச் செய்தார் ஜெ. 2011 ஜூலை மாதம் 3ஆம் தேதி சட்டத் துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்.
அவருக்குப் பதிலாக செந்தூர் பாண்டியனை சேர்த்து புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களில் மூன்றாவது அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. அடுத்த அதிரடி, நவம்பர் மாதம் நடந்தேறியது. நவம்பர் 4ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் சூறாவளி மாற்றம் ஏற்பட்டது.
ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர். மேலும் அமைச்சரவையில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையனின் சரிவு, இந்த அமைச்சரவை மாற்றத்தில் இருந்துதான் ஆரம்பித்தது.
செங்கோட்டையனின் துறையும் மாற்றம் கண்டது. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பரஞ்ஜோதி 2011 டிசம்பர் 9ம் தேதி ராஜினாமா செய்தார். அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயத்தின் பதவியும் பறிக்கப்பட்டது. இருவருக்கும் பதிலாக உள்ளே வந்தவர்கள்தான் எம்.எஸ்.எம். ஆனந்தன், வளர்மதி ஆகியோர்.
அமைச்சரவையில் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த செங்கோட்டையன், முக்கியத்துவம் இல்லாத ஐ.டி. துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டு, மீண்டும் வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டு, ஆறாவது அமைச்சரவை மாற்றத்தில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
அமைச்சரவை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை, பள்ளிக் கல்வித் துறைதான். முதலாவது அமைச்சரவையில் இந்தத் துறைக்கு அமைச்சர் சி.வி. சண்முகம், அவர் சில மாதங்களில் மாற்றப்பட்டு புதிதாக அமைச்சரவையில் இணைந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் துறை ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அவரிடம் இருந்து என்.ஆர். சிவபதி கைக்குச் சென்று, அதன் பின் வைகைச் செல்வனுக்கும், அவருக்கு அடுத்து உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பனுக்குக் கூடுதல் துறை என பந்தாடப்பட்டது.
இறுதியாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியிடம் இந்தத் துறை இருந்து வருகிறது.