தேர்தலில் மக்கள் தரும் ஜனநாயக தண்டனையில் இருந்து ஜெ. தப்பவே முடியாது: கருணாநிதி காட்டம்
சென்னை: ஊழல் முறைகேடுகள் புரிந்துள்ள ஜெயலலிதாவால் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாவது:

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா, மக்களுக்குச் சொன்ன உறுதிமொழிகளை நிறைவேற்றி நாட்டின் நலனைப் பேணிப் பாதுகாப்பதைவிட, தன்னுடைய அமைச்சர்கள் தொடர்ந்து முறைகேடுகள் - ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனைவருக்கும் தெரிந்த காரணங்களுக்காக உள்நோக்கத்தோடு அனுமதிப்பதும், அவர்களுடைய நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய் பொதுமக்கள் முகம் சுளித்ததும், "எனக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்து விட்டது" என்று கபட நாடகமாடி, அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குவதும், "அம்மாதான் நடவடிக்கை எடுத்து விட்டாரே" என்ற எண்ணத்தில் மக்கள் அனைத்தையும் மறந்ததும், மீண்டும் அவர்களை அமைச்சரவையிலே சேர்த்துக் கொள்வதும் என்ற சங்கிலித் தொடர் போன்ற சாகசத்திலேயே கவனம் செலுத்தி தமிழகத்தைச் சுயநல வேட்டைக் காடாக மாற்றி விட்டார்.
இப்போது மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, வேறொரு தந்திரத்தைக் கையாண்டு வருகிறார். அவருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒருசில அமைச்சர்கள் வாங்கிச் சேர்த்த ஏராளமான பணத்தையும், சொத்துக்களையும் காவல் துறையைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்து ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருவதை, பெரும்பாலான ஏடுகள் மறைத்தாலும் ஒருசில ஏடுகள் மனசாட்சிக்குப் பயந்து விபரங்களை வெளியிடத்தான் செய்கின்றன.
அ.தி.மு.க. அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடியவிருக்கிற நேரத்தில், ஆட்சியின் கோணல் நிர்வாகத்தைப் பற்றி, "தி இந்து" தமிழ் இதழில், திரு. சமஸ் எழுதியிருக்கும் செய்திக் கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் கூற வேண்டுமேயானால்,
"இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலிதா. 2011இல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர்.
2011இல் தி.மு.க. அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டது என்று ஜெயலலிதா சொன்ன போது, தி.மு.க.வின் நிர்வாகச் சீர்கேட்டுக்கான உதாரணமாக அவர் கூறியது, தி.மு.க. விட்டுச் சென்ற ஒரு இலட்சம் கோடி ரூபாய்க் கடன்.
2016இல் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது, ஜெயலலிதா விட்டுச் செல்லும் கடன் 2.11 இலட்சம் கோடி ரூபாய். தி.மு.க. விட்டுச் சென்ற கடனாவது காலங்காலமாகத் தொடர்ந்து வந்த அரசுகள் விட்டுச் சென்ற கடன்களின் நீட்சி. தனது ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும், அதை விட அதிகமான கடனை உருவாக்கியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. இது எந்த வகையான நிர்வாகத்துக்கான சான்று?
பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் ஐந்தாண்டுகளுக்குள் ஆறு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஓராண்டுக்கு மேல் கூட ஒரு துறையில் ஒரு அமைச்சர் நீடிக்கும் வாய்ப்பில்லை என்றால், அந்தத் துறையின் நிலை என்னவாக இருக்கும்?"
- என்று பல்வேறு விபரங்களை "தி இந்து" நாளேடு வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications