ஆம்னி பேருந்தில் அமைச்சர் ஏற்றிய மூட்டை மூட்டையாக பணம், நகைகள்
இதுபற்றி "தி இந்து" கட்டுரையில் வெளிவந்துள்ள செய்தி மட்டும் இதோ :-
"அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன், வைத்தியலிங்கம், பழனிச்சாமி ஆகியோர், வர விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு இடம் பெற்று தருவதாகக் கூறி, தலைமைக்குத் தெரியாமல் நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்ததாகப் பேசப்படுகிறது.
ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இவர்கள் தலைமையிடம் வரவழைக்கப் பட்டு, விசாரிக்கப்பட்டதாகவும், அவர்கள் முறைகேடாகச் சேர்த்த சொத்துகள் யாவும் பறிமுதலாக்கப்படுவதாகவும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பேசப்படுகிறது.
ஒரு அமைச்சர் பதவி நீக்கப்பட்ட பின், பண மோசடியில் அவர் ஈடுபட்டதாக வழக்குப் பதிவாகிறது. இன்னொரு அமைச்சரின் உதவியாளர் அரசுசார் நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் வாங்கித் தர பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்படுகிறார்.
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் மட்டும் அல்ல இது. அரசு சம்பந்தப்பட்டது, மாநிலத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டது, மக்கள் சம்பந்தப்பட்டது. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் பணம் மக்கள் பணம். அவர்கள் செய்த தவறுகளாகப் பேசப்படும் யாவும் பொருளாதாரக் குற்றங்கள்" என்று "தி. இந்து" கட்டுரை எழுதியிருக்கிறது.
மன்னார்குடி அமைச்சர் ஒருவர் "ஆம்னி" பேருந்தில் மூட்டை மூட்டையாக பணத்தையும், நகைகளையும் ஏற்றி சென்னைக்குக் கொண்டு வந்த செய்தியை அந்த பேருந்தின் அதிபரே ஏடுகளில் வெளியிட்ட செய்தியும் வந்துள்ளது.
ஏடுகளிலே வெளிவந்துள்ள மிகக் கடுமையான இந்தச் செய்திகள் பற்றி, அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப் பணிகள் நடந்தனவோ இல்லையோ, அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள், முறைகேடுகள், சுரண்டல்கள் ஆகியவை மட்டும் முழு நேரமும் நடக்கும் முக்கியப் பணிகளாக நடைபெற்று வருகின்றன.