உலகக் கோப்பை: கருணாநிதிக்கு ஒரே ஜுரம், கிரிக்கெட் ஜுரம்
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் திமுக தலைவர் கருணாநிதியைும் விட்டு வைக்கவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காதலர் தினத்தன்று துவங்கியது. இந்நிலையில் இன்று காலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.
துணை கேப்டன் கோஹ்லி 107 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் என்று எங்கு பார்த்தாலும் இந்த போட்டி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ட்விட்டரில் #BleedBlue, இந்தியாvsபாகிஸ்தான், கோஹ்லி ஆகியவை தான் காலையில் இருந்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த கிரிக்கெட் ஜுரம் திமுக தலைவர் கருணாநிதியையும் விட்டு வைக்கவில்லை.
தான் கூல் கேப்டன் டோணியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார் கருணாநிதி. #DMK#Kalaignar#Karunanidhi #msdhoni #IndiavsPak என்று தெரிவித்துள்ளார். இதை இதுவரை 3 ஆயிரத்து 660 பேர் லைக் செய்துள்ளனர்.
90 வயதாகும் கருணாநிதி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இளைஞனைப் போன்று சுறுசுறுப்பாக கருத்துகளை தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜுரம் வந்ததில் ஆச்சரியம் இல்லை.