திமுக ஆட்சிக்காலத்தில் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர்...சட்டம் ஒழுங்கும் சிறப்பு- கருணாநிதி
சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு அக்கறையோடு இருக்கிறது என்றும், தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்றும், முதலமைச்சர் ஜெயலலிதாவும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும், தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் தான் சட்டம் ஒழுங்கை இடையறாது பேணிக் காப்பதிலும், சமுதாய நல்லிணக்கம் மற்றும் நல்லுறவு போற்றி நலிந்த பிரிவினர், மகளிர் ஆகியோரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தமிழகக் காவல் துறை புகழ் பெற்று விளங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல; நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்வர். மக்கள் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடமையாற்றி வரும் காவல் துறை அலுவலர்களுக்காக, அவர்கள் சலிப்பின்றி உற்சாகத்துடன் உழைத்திட வேண்டுமெனும் நோக்கில், தி.மு. கழக அரசு காலத்தில் நிறைவேற்றிய நலத் திட்டங்களும், அளித்துள்ள சலுகைகளும் பலப் பல.

காவல் துறையினரின் கஷ்ட நஷ்டங்களை எதிர்க் கட்சியாக இருந்த போதே, நான் எழுதிய நாடகத்தில் இடம் பெறச் செய்து, பொறுப்புக்கு வந்தவுடனேயே அதாவது 1969ஆம் ஆண்டில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு. ஆர்.ஏ. கோபாலசாமி, ஐ.சி.எஸ்., அவர்கள் தலைமையில், இந்தியாவிலேயேயே முதல் முறையாக, காவல் துறையினரின் நிலைமைகளை ஆராய்ந்து பரிந்துரைக்க ஒரு கமிஷனை நியமித்தேன் என்பதை காவல் துறை நண்பர்களே நன்கறிவார்கள். அந்தக் கமிஷன் ஆய்வு செய்து 133 பரிந்துரைகளை செய்த போது, அதில் 115 பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியவனும் நான் தான்.
1976 முதல் 1989 வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இல்லை; அப்போது காவல் துறையினரின் சிரமங்களைப் பரிசீலிக்க எந்தக் கமிஷனும் போடப்படவில்லை. 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தி.மு. கழகம் ஆட்சி அமைத்த பிறகு தான், முன்னாள் தலைமைச் செயலாளர், பி. சபா நாயகம், ஐ.ஏ.எஸ்., அவர்களுடைய தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த 112 பரிந்துரைகளில் 102 பரிந்துரைகள் மீது முடிவெடுத்து 1991ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு 79 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினேன் என்பது வரலாறு.
மீண்டும் 2006ஆம் ஆண்டு கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான், ஓய்வு பெற்ற உள்துறைச் செயலாளர் பூரணலிங்கம், ஐ.ஏ.எஸ்.ட, அவர்கள் தலைமை யில் மூன்றாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் பரிந்துரைத்த 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் அரசினால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
1969ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கம் - அண்ணா பதக்கம், பாராட்டத்தக்க வகையில் பணியின்பால் ஈடுபாடு கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராயத்தை மிகச் சீரிய முறையில் தடுத்து சாதனை புரியும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி பதக்கமும் (காந்தியடிகள் காவல் விருது) பண முடிப்பும் கொடுக்கப்படுகிறது. தி.மு. கழக ஆட்சியில் காவல் துறையினருக்குச் செய்யப்பட்ட சாதனைகளில் ஒரு சில தான் இவை.












Click it and Unblock the Notifications