பாலாறு தடுப்பணைக்குத் தமிழக அரசு தடை ஆணை பெற வேண்டும்
தற்போது, இன்றைய நாளேடுகளில், பாலாற்றுக்கு நீரா தாரமாக விளங்கும் துணை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டுமானப் பணியில் ஆந்திர மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதெனப் படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது.
இதன் மூலம் பாலாறு பயணிக்கும் வனப் பகுதியில் கிடைக்கும் மழை நீர் மொத்தமும் புல்லூர் தடுப்பணைக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டு விடும். இது தொடர்பாக பசுமைப் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், ஏ.சி. வெங்கடேசன் கூறும்போது, "ஆந்திர மாநிலத்தில் குப்பம் தொகுதியில் உள்ள வனப் பகுதியில் பெய்யும் மழை நீர் மொத்தமும் பாலாற்றுக்கு வந்து சேர்ந்தது.

இதன் மூலம் தமிழகத்தில் ஓடும் பாலாற்றுக்குத் தடை இல்லாமல் நீர் கிடைத்தது. ஆனால் தற்போது ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைகளால், வனப் பகுதியில் கிடைக்கும் மொத்த மழை நீரும் இனிமேல் பாலாறு வழியாக ஆந்திராவைக் கடந்து தமிழகத்துக்கு வந்து சேர வாய்ப்பில்லை. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும். ஆந்திர அரசின் கட்டுமானப் பணிகளுக்கு தடையாணை பெற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போதுள்ள நிலையில் தமிழக அரசும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் துரிதமாகச் செயல்பட்டு, ஆந்திர அரசின் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதி மன்றத்தில் தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆந்திர அரசை எதிர்த்து வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது; அந்த வழக்கில் உடனடியாகத் தடை ஆணை பெறாவிட்டால், ஆந்திர அரசு பாலாறு - துணை ஆற்றில் தடுப்பணையையும் கட்டி முடித்து விடும் என்பதை உணரவேண்டும்!












Click it and Unblock the Notifications