சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி... கையெழுத்து போட்டார்... கிளம்பினார்
சென்னை: திமுக தலைவரும் திருவாரூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பிச் சென்றார். சட்டசபைக்கு வந்த கருணாநிதிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று கைத்தறி தொழிலாளர் நல மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்தநிலையில் திமுக. தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் இன்று சட்டசபைக்கு வந்தார். அவரை திமுக. எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.பின்னர் சட்டமன்ற லாபியில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்ட பின்னர் கருணாநிதி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்தும் 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் சட்டசபைக்கு ஒரே ஒரு நாள் வருகை தரும் கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது.
தற்போது 2016 சட்டசபை தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. கடந்த மே 25ம் தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து முன் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தார். சட்டசபையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது அவர் அமர்ந்திருந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு 2வது வரிசையில் அதாவது மு.க.ஸ்டாலினுக்கு பின்புறம் கருணாநிதிக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்தார். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடம், கருணாநிதி வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியானதாக இல்லை என திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சபை நடவடிக்கைகளில் தற்போதும் கருணாநிதி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கருணாநிதி, இன்று சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சென்றார். அவருடன் ஆ. ராசா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் வருகை தந்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்பு கொடுத்தனர்.