கருணாநிதியின் 91வது பிறந்த நாள்.. சென்னையில் உருவாகும் 'திருக்குவளை வீடு' மேடை!!
சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருக்குவளை வீடு போன்ற மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி வருகிறது. முன்னதாக ஜூன் 2-ந் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் திமுகவின் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
அதற்கு அடுத்த நாள் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக தென் சென்னை மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதில் மேடையை கருணாநிதியின் திருக்குவளவை வீடு தோற்றத்தில் அமைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்னர் ஒய்.எம்.சி. அரங்கில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கோபாலபுரம் வீடு, அறிவாலயம் போன்ற மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் திமுகவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பிறந்த நாள் விழாவே வேண்டாம் என்ற முடிவில் கருணாநிதி இருந்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலர் பேராசிரியர் அன்பழகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், ஜெ. அன்பழகன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து கருணாநிதியை வலியுறுத்தியதில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளும் முதல் பிரமாண்ட விழா என்பதால் திமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ஜூன் 3-ந் தேதிக்காக காத்திருக்கின்றனர்.