மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் - ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அனுமதி அளித்தால் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி விரைவில் சந்திப்பார் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருமுறை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் மருத்துவமனையில் டிவி பார்ப்பது போன்ற போட்டோ வெளியானது.
பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து வீட்டிலேயே சிகிச்சை பெற்ற வண்ணம், கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார்.
ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரடியாக சந்திக்க முடியவில்லையே என தொண்டர்கள் வருத்தப்பட்டு வந்தனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் ஸ்டாலினின் பிறந்த நாளின் போது அவருக்கு கருணாநிதி புத்தகத்தை பரிசாக வழங்கும் போட்டோ வெளியானது.
அவரது தொண்டையில் டியூப் பொருத்தப்பட்டிருப்பதால் முழுமையாக பேச முடியவில்லை. அவர் முழுமையாக பேசுவதற்கு பேச்சுபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி எப்போது நம்மை சந்திப்பார் என அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் நிலையில் அவர் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாது, இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
இது குறித்து இன்று ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் அனுமதி அளித்தால் தொண்டர்களை கருணாநிதி விரைவில் சந்திப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications