காங்கிரசுடனான கூட்டணி பற்றி கருணாநிதி பேசவில்லை..ஊடகங்கள் திரித்தன: ஸ்டாலின்
சென்னை: தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்க இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி பேசவில்லை .. அது ஊடகங்களின் திரிப்பு செய்தி என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் கை குலுக்க தயார்' என பேசியிருந்தார். அவர் ‘கை' எனக் குறிப்பிட்டது காங்கிரஸைத் தான் என்றும், எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய காங்கிரசுடன் மீண்டும் கூட்டணிக்கு தயார் என தி.மு.க. தலைவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், சில பத்திரிகைகள் செய்திகளை திரித்து கற்பனையாக அதுபோல் செய்திகளை வெளியிடுகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. மதசார்பற்ற கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அதில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை.
தி.மு.க. எப்போதும் கருத்துக்கணிப்புகளை நம்புவது கிடையாது. மக்களிடம் தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மக்களின் வரவேற்பை பார்க்கும் போது தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றார்.