வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாஸ்
Recommended Video
வேலூர்: சர்ச்சைக்குரிய வகையில் முதல்வரையும் காவல் துறையையும் பேசிய விவகாரத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.
இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.
தற்போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்பு சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்த காவல் நிலையத்தில் இருந்து கருணாஸ் அழைத்து வரப்பட்டார்.
அப்போது கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ரக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் கருணாஸ் மீதான கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தும் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அவர் தரப்பிலிருந்து நாளை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு கருணாஸ் மாற்றப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார். கருணாஸுடன் கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகி செல்வநாயகம் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.