கருப்பசாமி பாண்டியன் தமிழகத்தை விட்டு தப்பி ஓட்டம்?
நெல்லை: திமுக பிரமுகரின் மகள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவர் தமிழகத்திலேயே இல்லை என்றும் அண்டை மாநிலம் ஒன்றுக்குப் போய் விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெல்லையைச் சேர்ந்த தமிழரசி என்ற திமுக பிரமுகரின் மகள் கருப்பசாமி பாண்டியன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகள் உள்பட நான்கு பிரிவுகளில் கருப்பசாமி பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் கொலை மிரட்டல் வழக்கும் அடக்கமாகும்.
இதையடுத்து கருப்பசாமி பாண்டியனைக் கைது செய்ய போலீஸார் தீர்மானித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவருடன்அவரது உதவியாளர் கார்த்திக்கும் தலைமறைவாகி விட்டார்.
முதலில் இருவரும் கேரளாவுக்குப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஒரு தனிப்படை விரைந்து சென்றது. ஆனால் அவர்கள் அங்கு இல்லை. வேறு மாநிலத்துக்கு இருவரும் தப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.