38 மாத ஊதியம் ஏழைகளுக்கு.. 39வது ஊதியத்தை ஜெ. விடுதலைக்காக பாலாபிஷேகத்திற்கு செலவழித்த எம்.எல்.ஏ.!
கரூர்: கடந்த 38 மாதமாக தனது மாதாந்திர ஊதியத்தை ஏழைகளின் நலனுக்காக செலவிட்டு வந்த கரூர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ காமராஜ், தற்போது 39வது மாத ஊதியத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலைக்காக சிறப்புயாகம் மற்றும் பாலாபிஷேகத்திற்காக செலவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் காமராஜ். இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து இவர் பெறும் சட்டமன்ற உறுப்பினருக்கான மாதசம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கபட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியில் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் படித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து தமிழக முழுவதும் அவரை விடுதலை செய்யகோரி பல்வேறு அறப்போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று தனது 39ஆவது மாத ஊதியத்தை கரூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு பாலமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 1008 லிட்டர் பாலாபிஷேகமும், ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு யாகமும் செய்து அவரை விடுதலை அடைய வேண்டி மனமுருகி வழிபட்டார் காமராஜ்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications