கரூர்: மணல் லாரிகளால் இடியும் நிலையில் உள்ள பாலம்
கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் பாலத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகள் சென்று வருவதால் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து கடந்த 1933-ஆம் ஆண்டு பாசனத்திற்காக தென்கரை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் வெட்டப்பட்டது.
மேலும் இந்த வாய்க்கால்கள் மீது மாயனூர் தலைப்பு பகுதியில் தண்ணீர் திறப்பது மற்றும் அடைப்பதற்காக இரும்பு ஷெட்டர்கள் அமைக்கப்பட்டது. இந்த ஷெட்டர்கள் அருகில் போக்குவரத்துக்காக பாலங்களும் அமைக்கப்பட்டது.
இந்த பாலங்களின் வழியாக காவிரியின் தென்கரை பகுதியில்
அமைந்துள்ள செல்லாண்டியம்மன் ஆலயம் முனியப்பன் ஆலயம் மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று வரலாம்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் காமராஜ் ஆட்சி காலத்தில் 1959-ஆம்
ஆண்டு புதிய கட்டளைவாய்க்கால் வெட்டப்பட்டு தலைப்பு பகுதியில் மதகு மற்றும் பாலம் கட்டப்பட்டது.
சுமார் 80ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலங்களின் வழியாக கோவில் திருவிழா மற்றும் ஆடிபெருக்கு சமயங்களில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது திருக்காம்புலியூர் பகுதியில் காவிரியிலிருந்து லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இந்த
பாலங்கள் வழியாக மாயனூர் பகுதிக்கு வருகிறது. தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சுமார் 20டன் பாரத்துடன் 15முதல் 20 முறை இந்த பாலத்தை கடந்து செல்கிறது.
அதாவது நாள்தோறும் சுமார் இரண்டாயிரம் முறை லாரிகள் அதிக பாரத்துடன் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. அதேசமயம் இதனருகே கரூர் மாவட்டத்தையும் திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் இந்த மூன்று கிளை வாய்க்கால் பாலத்தை கடந்து தான் செல்ல முடியும்.
எனவே நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் வழுவிழந்த இந்த பாலங்கள் தற்போது இடிந்துவிழும் அபாயநிலையில் உள்ளது.
மேலும் இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ234கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கதவணை பாலத்தின் நல்ல நோக்கம் வீணாவிடும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் புதிய பாலங்கள் கட்டவேண்டும் என்றும் அதுவரை மணல்
லாரிகள் மற்றும் அதிக பாரங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.