விபத்தில் சிக்கிய இளைஞருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, டாக்டர்களை வரவழைத்த கரூர் கலெக்டர் ஜெயந்தி
கரூர்: கரூரில் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸுக்கும், டாக்டருக்கும் அவரே போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து விட்டு கிளம்பிச் சென்றார் கரூர் கலெக்டர் ஜெயந்தி.

கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் ச.ஜெயந்தி, இவர் டெங்கு குறித்து ஆய்வு செய்ய பட்டி தொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி அவரது காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி விட்டார். இதை நேரில் பார்த்த கலெக்டர் ஜெயந்தி காரை நிறுத்தி கீழே இறங்கினார். அந்த இளைஞருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வரவழைத்து டாக்டர்களை அழைத்தார். அந்த நபருக்கு உரிய முதலுதவி கிடைக்க ஏர்பாடு செய்தார்.

மேலும் 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்து மேல் சிகிச்சைக்காக கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரே அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கொளுத்தும் வெயிலையும் பாராமல் டாக்டர்களை அழைத்ததுடன், ஆம்புலன்ஸ்ஸிற்கும் தகவல் கொடுத்து ஒரு உயிரை காப்பிற்றிய கலெக்டரின் செயல் அனைவரையும் கவர்ந்தது.

கலெக்டருடன், மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு புகைப்பட கலைஞர் மதிவாணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்களும், மருத்துவர்களும் கொளுத்தும் வெயிலில் கூடவே இருந்தனர்.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேட்டபோது இது மனிதாபிமானத்திற்காக கலெக்டர் அம்மா செய்தது சார் என்றார்.












Click it and Unblock the Notifications