கொசுக்களே இருக்கீங்களா.. டார்ச் லைட் அடித்து சோதனையிட்ட கரூர் கலெக்டர்!
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி, டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய டார்ச் லைட்டும் கையுமாக சோதனையில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், கரூர் நகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை, இந்திரா காலனி, சிலோன் காலனி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள நீர் நிலைகள் மற்றும் தொட்டிகளை வீடாக வீடாக இரவு என்று பாராமல் கரூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இரவு என்பதால் டார்ச் லைட் அடித்து கூட கொசுக்களை கண்காணித்தார். மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தினார். சுகாதாரமற்ற தண்ணீரை வெளியேற்றியும், நல்ல தண்ணீரீல் கொசுக்கள் முட்டையிடாமல் இருக்க மருந்துகள் ஊற்றி கொசுக்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு ஏதாவது சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அரசு மருத்துவமனைகளை நாடி சரியான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய வசிப்படங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து தொற்று நோய்கள் வருவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு குறித்து கரூர் அருகே உள்ள தளவாபளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டெங்கு குறித்து 6 மாவட்ட கலெக்டர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சோதனையில் கலெக்டர் ஜெயந்தி இறங்கியுள்ளார். மேலும், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியில் அபி என்ற சிறுமி டெங்குவினால் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆங்காங்கே இது போன்ற சோதனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு என்றும் பாராமல் டெங்கு கொசுக்களை டார்ச் லைட் அடித்து கண்காணித்த சம்பவம் கரூர் மாவட்ட மக்களிடையே ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications