குண்டர் சட்டத்தில் உள்ளே போட்ருவேன்! விவசாயிக்கு மிரட்டல்? கரூர் கலெக்டரின் சர்ச்சை ஆடியோ!
கரூர்: உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக புகாரளித்த விவசாயியை, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தூக்கி போட்ருவேன் எனக் கூறிய ஆடியோ தீயாய் பரவி வருகிறது.
இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே டாஸ்மாக் அதிக விற்பனைக்கு விருது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் மோதல் என பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இப்போது விவசாயிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு வில்லங்கமாகியுள்ளது.
கரூர் மாவட்டம் தென்னிலையை சேர்ந்த விவசாயி ராஜா என்பவர், உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான புகாரை கூறுவதற்காக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை அலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த உரையாடலில், சர்வே எண் 446க்கு அனுமதி வாங்கிவிட்டு சர்வே எண் 445ல் எப்படி உயர் மின் கோபுரம் அமைக்கிறார்கள் என புகார் கூற வாய் திறக்கும் போதே, உங்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தூக்கி போட்ருவேன் என எச்சரிக்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர்.

மேலும், இதனை ரெக்கார்டு செய்து கொண்டாலும் பரவாயில்லை, அதைப்பற்றியெல்லாம் தனக்கு கவலையில்லை எனவும் கரூர் மவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அந்த விவசாயியிடம் பேசுகிறார். மேலும், விவசாயி என்ற போர்வையில் நீங்க அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதாக எனக்கு தகவல் வருது, என்ன லோக்கலில் அரசியலில் பெரிய ஆளாக பார்க்கிறீர்களா எனக் கேட்கிறார்.
விவசாயி தென்னிலை ராஜா -கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இடையேயான அலைபேசி உரையாடல் ஆடியோ வேகமாக பரவி வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கரூர் கலெக்டர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications