ஜெ. மீண்டும் முடி சூட வேண்டி.. மொட்டை போட்ட அதிமுக எம்.எல்.ஏ.!
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக முடி சூட வேண்டும் என்பதற்காக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ காமராஜ், முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
அ.தி.மு.க பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பெயரில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த நேரத்தில் அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர் கிருஷ்ணராயபுரம் காமராஜ்.
தனது 38 மாத சம்பளத்தொகையையும் ஜெ பெயரில் கொடுத்த ஒரே எம்.எல்.ஏ காமராஜ் தான்.
கோவில் கோவிலாக
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதானதையடுத்து அவர் விடுதலையாக வேண்டும் என கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் இவர் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.
60 க்கும் மேற்பட்ட கோவில்களில்
திருக்கண்மாலீஸ்வரர் திருக்கோயில், ஊராளி காளியம்மன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்காம்புலியூர் லஷ்மி நாராயண சுவாமி கோயில் உள்ளிட்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட கோயில்களில் தினமும் அபிஷேகமும், பூஜையும் செய்து வருகிறார்.
சர்ச், பள்ளிவாசல்களிலும்
மேலும் கிருஸ்துவ கோயில்களிலும், பள்ளி மசூதிகளிலும், தினமும் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்பதற்காக பல்வேறு பூஜைகள், பல்வேறு அறப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
இன்று முடி காணிக்கை
இன்று கரூர் அடுத்த வாங்கல் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக தன்னுடைய முடியை காணிக்கையாக செலுத்தினார்.
அங்கப்பிரதட்சனம் செய்தவர்
கரூர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் என்ற பொறுப்பையும் இவர் வகித்து வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காமராஜ் கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் ஜெயலலிதா அனைத்து வழக்கிலிருந்து விடுபட வேண்டியும், மீண்டும் தமிழக முதல்வர் அரியணையில் அமரவேண்டும் என்பதற்காக அங்கப்பிரதட்சனை செய்து நேர்த்தி கடன் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.