டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற கரூர் மக்கள் கோரிக்கை!
கரூர்: கரூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது அருந்தும் இடத்தை உடனடியாக அகற்றக் கோரி அம்மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சூடாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையும், மது அருந்தும் இடமும் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த டாஸ்மாக் கடையின் அருகே நியாயவிலைக் கடை, குடி தண்ணீர் பிடிக்கும் இடம் ஆகியவை உள்ளது. எனவே, அங்கு வரும் பெண்கள் மற்றும் மாணவிகளை மது அருந்த வருபவர்கள் கேலி மற்றும் கிண்டல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, உடனடியாக டாஸ்மாக் கடை மற்றும் மது அருந்தும் இடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று அவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.