அட, இல்லாத பஸ்ஸில் எப்படிப்பா பயணிப்பது.. கரூர் ரிப்போர்ட்டர்கள் கன்பியூஷன்!
கரூர்: கரூரில் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்துக்கான இலவச பேருந்து பயண அட்டையை பார்த்து செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறைக்கு மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகள் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட நிருபர்கள், புகைப்படகலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கரூரில் உள்ள சுமார் 40 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதை பார்த்த செய்தியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி.
வேறொன்றும் இல்லை முன்பு பஸ் பாஸில் திருச்சி ரீஜியன் என்று எழுதப்பட்டிருந்ததால் டி.என்.45 பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் செக்கர்களின் உத்திரவு. தற்போது புதிய பஸ் பாஸில் கரூர் ரீஜியன், டிஎன் 47 பேருந்துகளில் மட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
டி.என்.47 பேருந்துகளில் மட்டும் தான் ஏற வேண்டுமா என செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியிடம் கேட்டதற்கு கரூர் மண்டலம் என உருவாக்கி அதற்கென அதிகாரிகள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இருப்பினும் அரசு பேருந்தில் டி.என் 47 என்று ஒரு பேருந்தும் இல்லை. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கே இந்நிலை என்றால் மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் நிருபர்களுக்கு என்ன கதி என்பது தான் தற்போது அனைத்து பத்திரிக்கையாளர்களின் கேள்வி.
ஏற்கனவே கும்பகோணத்தில் உள்ள 4 செக்டர்களில் திருச்சி ரீஜியனில் மட்டும் தான் பயணிக்க வேண்டிய அவல நிலை இருந்த நிலையில் தற்போது கரூர் ரீஜியனில் தான் பயணிக்க வேண்டும் என்றால் கரூர் ரீஜியனுக்கு வண்டி எங்கே இருக்கு.
அரசு போக்கு வரத்து துறை ஊழியர்கள் எந்த பேருந்தில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்ட பேருந்துகளில் தான் செல்ல வேண்டும் என்ற அவல நிலை போக்குவரத்து துறை அமைச்சர் ஊரிலும் என்றால் மற்றவர்களுக்கு என்ன?