தியேட்டரில் வைத்து திருட்டு விசிடி தயாரித்த கும்பல்.. மேனேஜர், ஆப்பரேட்டர் கைது.. உரிமையாளர் ஓட்டம்!
கரூர்: கரூரில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்து திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்து அந்தத் தியேட்டரின் மேலாளர், ஆப்பரேட்டரைக் கைது செய்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர் தப்பி ஓடி விட்டார்.
இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக வெளியிடப்படும் அனைத்துத் திரைப்படங்களும் மறுநாளே கள்ள மார்க்கட்டில் குறுந்தகடுகளாக விற்பனைக்கு வந்து விடுகின்றன. முதலில் தியேட்டர் பிரின்ட்டை வெளியிடுகிறார்கள். அடுத்த சில நாட்களில் தெள்ளத் தெளிவான காப்பி கைக்கு கிடைத்து விடுகிறது. இதனால் திரைப்படத் துறை பெரும் சவாலை சந்திக்கும் நிலை காணப்படுகிறது.
இது குறித்து வீடியோ தடுப்பு காவல் பிரிவினர் கண்துடைப்பிற்க்காக நடவடிக்கை மேற்கொள்வதால் இக்குற்ற செயலை தடுக்க முடியாமல் தயரிப்பாளர்கள் தவித்து வந்தனர். தொழிநுட்பம் வளர்ந்துள்ள சூழலில் படக்காட்சிகளை துல்லியமாக பார்க்கவும் கேட்கும் வகையில் கியூப் என்ற தொழில்நுட்ப முறையில் சமீபகாலங்களாக திரையிடப்பட்டு வருகிறது.
கரூரிலும் சில தியேட்டர்களில் கியூப் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதைப் பயன்படுத்தி துல்லியமான முறையில் தியேட்டரிலேயே திருட்டு விசிடி கும்பல் படத்தை காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளனர். கரூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பொன் அமுதா திரை அரங்கில் கடந்த 15.01.15 அன்று காலை சுமார் 11 மணியளவில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளிவந்த டார்லிங் திரைப்படத்தை திருட்டு தனமாக குறுந்தகடுகளாக தயாரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திருட்டு வீடியோ கண்கானிப்பாளர் சதீஸ்குமார் வீடியோ தடுப்பு காவல் பிரிவில் புகார் அளித்தார். இங்கு தயாரித்த குறுந்தகட்டை மும்பையில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கரூர் பொன அமுதா திரை அரங்கில் பதிவு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இன்று திருட்டு வீடியோ தடுப்பு காவல் துறையினர் திரை அரங்கு மேலாளர் ரவிச்சந்திரனையும், ஆப்பரேட்டர் சுப்பிரமணியையும் கைது செய்து கரூர் குற்றவியல் எண் 1ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த குற்ற செயலுக்கு பயன்படுத்திய ரூ30 லட்சம் மதிப்பிலான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய திரையரங்கு உரிமையாளர் பொன்னுச்சாமியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
திரையுலகமே திருட்டு வி.சி.டி யை ஒழிக்க போராடி வரும் நிலையில் திரையரங்கத்திலேயே திருட்டு வி.சி.டி தயாரித்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்துள்ளது.