கதிராமங்கலம் போராட்டம்.. ஓஎன்ஜிசிக்கு எதிராக தஞ்சை வணிகர்கள் கடை அடைப்பு
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சை வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 11 நாட்களாக கதிராமங்கலம் கிராமத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை வணிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது ஓஎன்ஜிசி. கடந்த மாதம் 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால், பதற்றமடைந்த கிராமத்து மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர்.
முழு அடைப்பு போராட்டம்
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் 11 நாட்களாக முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்
இதற்கு ஆதரவு அளித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைவர்கள் பேரணி
இதனைத் தொடர்ந்து, நேற்று கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் வரை பேரணியாக அரசியல் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் சென்றனர். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், வைகோ, முத்தரசன், வேல்முருகன், அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன், பெ. மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
தஞ்சை வணிகர்கள் போராட்டம்
இந்நிலையில், இன்று தஞ்சை வணிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தஞ்சையை சுற்றியுள்ள திருவிடைமருதூர், ஆடுதுறை, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.