எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான்: கருணாநிதி
சென்னை: எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி தனது சொத்துப்பட்டியலை வெளியிடத்தயாரா என்று மார்க்கண்டேய கட்ஜூ எழுப்பிய கேள்விக்கு அவர் கேள்வி பதில் வடிவில்
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே?
பதில்: என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடைய 25ஆம் வயது முதல் திரைக்கதை, உரையாடல் எழுதியிருக்கிறேன். எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீடுதான்.
இந்தியாவிலே உள்ள எந்த முதலமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரியவில்லை. இந்த வீட்டைக் கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக்கட்டளைக்கு இப்போதே எழுதிக் கொடுத்து விட்டேன்.

நீதிபதியின் சொத்துக்கணக்கு என்ன?
நான் திருப்பிக்கேட்கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல்வரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக் குவிப்பு வழக்கு என் மீதா நடக்கிறது? அந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைக் காப்பாற்றத் தானே யாருடைய தூண்டுதலாலோ இவர் தற்போது புதிதாகப் புறப்பட்டிருக்கிறார்.

ஜாமீனில் விடுவிக்கவில்லை
கேள்வி: உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சொல்லியிருக்கிறாரே?
பதில்: புகார் கூறியிருக்கிற நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் தொடர்ந்து இருந்தவர். ஓய்வுக்குப் பின் 'பிரஸ் கவுன்சில் ஆஃப் இண்டியா'வின் தலைமைப் பொறுப்பிலே இருப்பவர். அவர் என் மீது மறைமுகமாகச் சாட்டியுள்ள குற்றச்சாட்டு, என்னை ஜாமீனில் நீதிபதி அசோக்குமார் விடுவித்தார் என்பதற்காக அவருக்கு நான் பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மையல்ல.

என்னைக் காவலில் வைத்தார்
2001ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெயலலிதா அரசில் நள்ளிரவில் காவல் துறையினர் அத்துமீறி வீடு புகுந்து என்னைத் துன்புறுத்திக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை 'ரிமாண்ட்' செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கே போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். நீதிபதி, காவல் துறையினரிடம் 'எப்.ஐ.ஆர். நீதிமன்றத்திற்கு முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதா?' என்று கேட்டபோது காவல் துறையினர் 'இல்லை' என்றனர்.
வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை. இந்த விவரங்கள் இல்லாமல் என்னை 'ரிமாண்ட்' செய்யக் கூடாது என்று கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடினார். ஆனால் அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் என்னை 'ரிமாண்ட்' செய்தார் என்பதுதான் உண்மை.

ஜாமீன் கேட்கவில்லை
மேலும், நான் அப்போது ஜாமீனே கோரவில்லை. காரணம், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் சிறையிலேயே இருக்க விரும்பினேன். என்னைக் கைது செய்ததால் ஜெயலலிதா அரசுக்கெதிராகத் தமிழகமே கொந்தளித்ததால், ஒரு சில நாட்களில் அரசாங்கமே என்னைச் சிறையிலிருந்து விடுவித்து விட்டது. அதனால் நான் ஜாமீன் கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை. ஒரு நீதிபதியாக இருந்தவர் இந்த விவரங்களை எல்லாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் என் மீது மறைமுகமாக எவ்வளவு பெரிய குற்றச்சாட்டினைச் சுமத்தியிருக்கிறார் என்பதை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க நினைக்கும் சில ஏடுகள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாரம் வேண்டாமா?
மேலும் கட்ஜூ, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஏதோ பேசியதாகவும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்திருப்பது பற்றி தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அவரைப் பேட்டி கண்டவர், 'அந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிவித்தது யார்?' என்று கேட்ட போது, அந்தச் செய்தியைச் சொன்னது யாரென்று மறந்து விட்டதாக நீதிபதி கட்ஜூ கூறியிருக்கிறார். ஒரு குற்றச்சாட்டைக் கூறும்போது முழு விவரங்களையும் ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டாமா?

வருமான வரி வழக்கில் சமரசம் ஏன்?
கேள்வி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது பெரிய குற்றமா என்று கேட்கிறார்களே?
பதில்: எத்தனையோ பேர் சாதாரண நிலையிலே உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பதுண்டு. ஆனால் அது பற்றி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து விடுவார்கள். தாமதத்திற்கு உரிய காரணமும் கூறி விடுவார்கள். ஆனால் யாரும் 17 ஆண்டுக் காலம் வழக்கை நடத்தி விட்டு, அதற்குப் பிறகு தண்டனை கிடைக்கப்போகிறது என்றதும் சமரசத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிறை தண்டனை நிச்சயம்
'வேண்டுமென்றே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாமல், வரி ஏய்ப்பு செய்தால், சிறைத் தண்டனை உண்டு. வரி ஏய்ப்புத் தொகை, ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம் மூன்று மாதம், அதிகப்பட்சம் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். வரி ஏய்ப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம் ஆறுமாதம், அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என்கிறார்கள். இந்த வழக்குகளில் ஜெயலலிதா 12 லட்சம் ரூபாயும், சசிகலா 9 லட்சம் ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 32 லட்சம் ரூபாயும் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த வழக்கு இன்னும் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டு எந்தத் திசையில் பயணிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications