அரவக்குறிச்சியில் போட்டியிட முடியாது... கே.சி. பழனிச்சாமி திடீர் முடிவால் திமுக ஷாக் #dmk
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் தாம் போட்டியிட முடியாது என்று கே.சி.பழனிச்சாமி திடீரென கூறியிருப்பதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் 2 தொகுதிகளுக்கும் தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.
இருப்பினும் தொடர்ந்து 2 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா அதிகரித்ததால் தேர்தலையே ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2 தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வேண்டியுள்ளது.
ரகசிய உடன்பாடு
அரவக்குறிச்சியில் திமுகவின் கேசி பழனிச்சாமியும் அதிமுகவின் செந்தில் பாலாஜியும் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இருவரும் எதிரி கட்சிகளாக இருந்தாலும் தொழில் ரீதியாக ரகசிய உடன்பாடு வைத்திருக்கிறார்கள் என்பது இரு கட்சி நிர்வாகிகளின் புகார்.
போட்டியிட விருப்பமில்லை
இதனால்தான் கேசி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுமாறு செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது திடீரென அரவக்குறிச்சி தொகுதியில் தம்மால் போட்டியிட முடியாது என கேசி பழனிச்சாமி கூறிவருகிறாராம்.
இதுதான் காரணம்
அதாவது தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுக வெல்லவும் வாய்ப்பிருக்கிறது; இது தமது 'மணல்' தொழிலுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்பது கேசி பழனிச்சாமி தரப்பு எண்ணமாம்.. அதேநேரத்தில் ஒருவேளை வெற்றி பெற்றாலும் அதிமுகவை வீழ்த்தியதால் அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டு அப்படியும் மணல் தொழில் பாதிக்கப்படும் என்றும் கணக்கு போடுகிறதாம் கேசி பழனிச்சாமி தரப்பு.
திமுக அதிர்ச்சி
இப்படி ஜெயித்தாலும் தோற்றாலும் வம்புதான் வரும்.. என்பதால் பேசாமல் கழன்று கொள்வதுதான் சரியாக இருக்கும் என கருதி மேலிடத்துக்கு தகவலை பாஸ் செய்திருக்கிறது கேசிபி தரப்பு. அரவக்குறிச்சியில் ஆளும் கட்சியை எதிர்த்து பணத்தை தண்ணீராய் செலவு செய்யும் சக்தி கொண்ட கேசி பழனிச்சாமியே ஒதுங்க நினைத்திருப்பது திமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்