அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்கை வாங்கிக்கங்க, மின்வெட்டின்போது பயன்படும்: ஸ்டாலின்
சேலம்: அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மின்வெட்டின்போது அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஏற்காட்டில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மாறனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பல்வேறு ஊர்களில் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் மக்கள் மத்தியில் பேசுகையில்,

ஜெயலலிதா
வான் வழியாக வந்து வெறும் 9 இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்ற ஜெயலலிதாவுக்கு ஆயிரக்கணக்கான போலீசார் தரை வழியில் பாதுகாப்பு கொடுத்தார்கள்.

காமாட்சி விளக்கு
வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணமும், காமாட்சி விளக்கும் கொடுத்து வருவதாக கேள்விப்பட்டேன். அவர்கள் அளிக்கும் காமாட்சி விளக்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இங்கு மின்வெட்டு இல்லாமல் உள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளது போல இங்கும் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். அப்போது அந்த காமாட்சி விளக்கு நிச்சயம் தேவைப்படும்.

வன்னியர்கள்
ஏற்காடு தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ஆட்சி காலத்தில் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய 40,000 வன்னியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் பலியாகினர்.

இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக இருந்தது அதை பிரித்து வன்னியர்களின் கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக ஆக்கியது திமுக அரசு தான். அதனால் இன்று வன்னிய மக்கள் அதிக அளவில் மாநில அரசின் உயர் பதவிகளில் உள்ளனர்.

நிவாரணம்
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக அரசு 40,000 வன்னியர்கள் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ததுடன் துப்பாக்கிச்சூட்டில் பலியான 23 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்தது. மேலும் அந்த 23 பேரின் குடும்பங்களுக்கு மாதாமாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. வன்னியர்களுக்கு திமுக தான் பாதுகாப்பு அரணாக செயல்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மின்வெட்டு
மக்கள் திமுகவுக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் கட்சி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் தொழில்கள் வளர்ச்சி அடையாமல் இருக்க, விவசாயம் நசிந்து போக மின் வெட்டு தான் காரணம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications