அவர்கள்தான் எங்கள் ராணுவ வீரர்கள்.. மீனவர்களை கொண்டாடும் கேரளா முதல்வர்!
கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் அம்மாநில மீனவர்கள் அதிக அளவில் உதவி இருக்கிறார்கள்.
சென்னை: கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் அம்மாநில மீனவர்கள் அதிக அளவில் உதவி இருக்கிறார்கள். அவர்களின் உதவியை மறக்கவே முடியாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. இதனால் அங்கே பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி
அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா வெள்ளத்தில் அதிக அளவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டது அம்மாநில மீனவர்கள்தான், வெள்ளம் என்றதும் படகுகளை தூக்கிக்கொண்டு அவர்கள் மீட்பு பணி செய்ய தொடங்கிவிட்டார்கள். ஒரு மீனவர் விடாமல், யாரும் கடலுக்கு செல்லாமல் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். இப்போதும் அவர்கள்தான் களத்தில் இருக்கிறார்கள்.

நுட்பமாக செயல்பட்டார்கள்
அதேபோல் இந்த மீனவர்கள் மிகவும் நுட்பமாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகவும் கஷ்டமான பகுதிகளில் எல்லாம் படகுகளை ஓட்டி சென்று இவர்கள் மீட்பு பணியை செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் செல்ல முடியாத இடங்களுக்கு கூட சென்று இவர்கள் மீட்பு பணிகளை செய்து இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை காப்பாற்றி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய நன்றி
இவர்களின் உதவிக்கு கேரளா முதல்வர் பெரிய நன்றி தெரிவித்துள்ளார். இவர்கள்தான் எங்கள் மாநிலத்தின் ராணுவ வீரர்கள் என்று அவர் கூறியுள்ளார். அதோடு, மீனவர்கள் உதவியை மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மீனவர்கள்தான் எங்களை உரிய நேரத்தில் காப்பாற்றியது என்று கூறி நெகிழ்ந்து இருக்கிறார்.

உதவி செய்கிறார்
ஆனால் வெறும் நன்றியோடு அவர் விடவில்லை. கேரளா வெள்ளத்தின் போது உதவிய மீனவர்களுக்கு அரசு உரிய மரியாதை செலுத்தும். எல்லா படகிற்கும் ஒரு நாளைக்கு ரூபாய் 3000 அளிக்கப்படும், அவர்கள் எத்தனை நாள் வேலைக்கு செல்லாமல் மீட்பு பணியில் ஈடுபட்டார்களோ அத்தனை நாளுக்கும் சம்பளம் அளிக்கப்படும். உடைந்த படகுகள் சரி செய்யப்படும். படகுகளை இழந்தவர்களுக்கு புதிய படகுகள் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications