ஜெயலலிதா மறைவுக்கு கேரளா கொடுத்த கண்ணீர் அஞ்சலி விளம்பரம்... கண்டு கொள்ளாத தமிழக அரசியல்வாதிகள்
ஜெயலலிதா மறைவுக்கு கேரளா அரசு நாளிதழ்களில் முழுபக்க அஞ்சலி விளம்பரம் கொடுத்து துக்கள் அனுஷ்டித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசியல்வாதிகள் ஒருவர் கூட துக்க விளம்பரம் கொடுக்கவில்லை என்பதுதான் சோகம்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது நாளிதழ்களில் பக்கத்திற்கு பக்கம் விளம்பரம் கொடுத்து தங்களின் இருப்பை வெளிப்படுத்துவார்கள். அதிமுகவினர் கொடுக்கும் விளம்பரத்திற்காகவே சிறப்பு பக்கங்களை ஒதுக்கும் அளவிற்கு விளம்பரங்கள் குவியும்.
உடல்நலக்குறைவால் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு எந்த அரசியல்வாதியும் இதய அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி விளம்பரம் கொடுக்கவேயில்லை என்பது சாதாரண தொண்டர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இதய அஞ்சலி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது கார் டயரை தொட்டு கும்பிட்டவர்கள் கூட அவரது மரணத்திற்குப் பின்னர் பணிவாக இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது இதய அஞ்சலி விளம்பரமும் புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் நாளிதழ் ஒன்றில் ஆறுதலுக்கு ஒரு தனியார் நிறுவனம் இதய அஞ்சலி விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளது.
கேரளா அரசு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள அரசு, நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம் தமிழக மக்களை நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களிலும் கேரள அரசு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கட்டுக்கடங்காத துயரம்
ஜெயலலிதாவின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருப்பது போன்ற படமும், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு' என்ற திருக்குறளும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கா நினைவுகளுடன் அஞ்சலி என்றும் கட்டுக்கடங்காத துயரம் என்ற வாசகங்கள் வழியே கேரள அரசு தங்களின் துயரத்தை பதிவிட்டுள்ளது.
கண்ணீரே விடலையே
ஜெயலலிதாவின் மறைவுக்கு சாதாரண தொண்டர்கள்தான் கண்ணீர் விட்டு கதறினர். அவரால் பதவி, பணம் சுகத்தை அனுபவித்த எந்த அரசியல்வாதிகளும் கண்ணீர் விட்டு கதறியதாக தெரியவில்லை. சிறைக்கு சென்ற போது பதவியேற்பு விழாவில் கண்ணீர் விட்டவர்கள் கூட ஜெயலலிதா மறைவின் போது உடல் அருகே சிரித்து கொண்டு இருப்பது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. கண்ணீரே விடாதவர்களா? கண்ணீர் அஞ்சலி விளம்பரம் கொடுக்கப்போகிறார்கள் என்பதே அனைவரின் கேள்வியாகும்.