மச்சினிச்சியின் திருமணம் பிடிக்கவில்லை.. மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய அக்காள் கணவர்
சென்னை திருவல்லிக்கேணியில் மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: திருவல்லிக்கேணியில் மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர் மணமகன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அப்துல் காதர். தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
பயங்கர சத்தம்
இந்நிலையில் இன்று அதிகாலை காதரின் வீட்டு வாசலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.
மண்ணெண்ணெய் குண்டு
அப்போது மர்மநபர் ஒருவர் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர்.
அக்காள் கணவர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மணப்பெண்ணின் அக்காள் கணவர் மொகைதீன் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வது தெரியவந்தது.
திருமணத்தை தடுக்க
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் அக்காள் மற்றும் அவரது கணவருக்கு உடன்பாடில்லை என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் நடைபெறுவதால் அதனை தடுக்க மண்ணெண்ணெய் குண்டை வீசியது தெரியவந்துள்ளது.
நிச்சயித்தப்படி திருமணம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மொகைதீன் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதால் நாளை திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நிச்சயித்தப்படி நாளை திருமணம் நடைபெறும் என இருவீட்டாரும் தெரிவித்துள்ளனர். ஆடிட்டர் வீட்டில் அதிகாலையில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.