பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை... ட்விட்டரில் குஷ்பு விளாசல்
அனிதாவின் தற்கொலை தமிழக மக்களுக்காக பாஜக எப்படி சிந்தித்து செயல்படும் என்பதற்கான சான்று என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் சுமார் இரண்டு மாத இடைவேளையில் அவர் மீண்டும் டுவிட்டர் பக்கத்திற்கு வந்துள்ளார்.
பாஜகவின் காலடியில் ஜனநாயகம் கொல்லப்படும் இந்த வேளையிலும் நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லையென்றால் இந்தியக் குடிமகளாக இருப்பதற்கே எனக்கு அருகதை இல்லை என்று குஷ்பு டுவீட்டியுள்ளார். அனிதாவின் தற்கொலை குறித்தும், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்தும் குஷ்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
வேடிக்கை
இந்தியா அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, நாம் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது நமது இந்தியா, நமது பெருமை நாம் தான் அதை காப்பாற்ற வேண்டும்.
கைகுலுக்கிய ஈபிஎஸ், ஓபிஎஸ்
தனது வாழ்வின் இறுதியான முடிவை எடுத்திருக்கிறார் அனிதா, ஆனால் அந்த சமயத்தின் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதில் பிசியாக இருந்தனர். இநத் திட்டத்திற்கு மூலக் காரணமான பிரதமர் மோடியிட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் அவர்கள்.
ஒற்றுமையாக போராடுவோம்
தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக பேசும் போது நான் என்னுடைய சகிப்புத் தன்மையை இழந்து விடுகிறேன். நாம் அனைவரும் தமிழகத்தை காப்பாபற்ற ஒற்றுமையாக செயல்படவேண்டிய நேரமிது. யாருக்கும் பெரும்பான்மை கிடையாது என்றாலும் நமக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரப் போட்டியோடு துணை பொதுச்செயலாளரும் இருக்கிறார்... இவர்களுக்கெல்லாம் யார் வாக்களித்தது?
|
நிதர்சனம்
அனிதாவின் தற்கொலை தான் தமிழக மக்களுக்கு பாஜக உணர்த்தும் நிதர்சனம், பாஜக தனக்காக மட்டுமே சிந்திக்கும், செயல்படும். இன்னும் எத்தனை கொலைகள் மற்றும் தற்கொலைகளை இந்த அரசு பார்க்க நினைக்கிறது.
காவிக்கு எதிராக சண்டை
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் குரல் வேண்டுமானால் குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் போன்றவர்களின் சிந்தனையை யாராலும் அழிக்க முடியாது. இந்தியாவில் காவி நிறத்தை பூசத் துடிப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர்த்து சண்டையிடுவோம், என்றும் குஷ்பு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.