புதுச்சேரி ஆளுநராக "அதிரடி" கிரண் பேடி நியமனம்..!
புதுவை: புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கிரண்பேடி. காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். ஆனால், அத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தற்போது புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை நியமிப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். கடந்தவாரம் தான் அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், அங்கு புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் இதுவரை கவனித்து வந்தார்.
நேர்மைக்கு பேர் போன கிரண்பேடி டெல்லி போலீஸ் கமிஷனராக செயல்பட்டவர். இவரது காலத்தில்தான் டெல்லி திகார் சிறை சீரமைக்கப்பட்டது. திகார் சிறையில் நடந்த நல்ல மாற்றங்களை பாராட்டி அவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications