தீவிர கண்காணிப்பில் உள்ள ஜெயலலிதாவை தொந்தரவு செய்வது சரியல்ல... கிரண் பேடி
சென்னை: தீவிர கண்காணிப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தொந்தரவு செய்வது சரியல்ல என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ வந்த புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண் பேடி கூறியுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க கிரண்பேடி இன்று சென்னை வந்தார். அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவக் குழுவிடம் விசாரித்து வந்த பின்னர் செய்தியாளர்களிடம் கிரண்பேடி கூறியதாவது;
பாண்டிச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தின் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இங்கு வந்தேன். அவரது உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் கேட்டேன். மற்றும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியையும் சந்தித்து விசாரித்தேன். அவர்கள் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் உடல் நலம் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உடல் நலம் இல்லாமல் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஜெயலலிதாவை தொந்தரவு கொடுப்பது சரியல்ல என்று கிரண்பேடி கூறினார்.