கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஜி.கே. நாகராஜ்
கோயமுத்தூர்: கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ரராணுவ உதவியோடு கர்நாடகா கலவரத்தை ஒடுக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கன்னட வெறியர்கள் தமிழர்கள் மற்றும் அவர் சொத்துக்கள் மீதான தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இன்று வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழர்களாகிய நாம் பொறுமையாக காத்துக்கொண்டிருப்பது நாகரீகத்தின் அடையாளம். கர்நாடகாவின் செயல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கலவரக்காரர்களை கடந்த ஒரு வாரமாக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது கர்நாடகா அரசு. உச்சநீதிமன்ற அமர்வு கர்நாடகா வன்முறைகளை கடுமையாக கண்டித்துள்ளது.
மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா அரசு தமிழர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது.
மத்திய அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி இராணுவத்தின் உதவியோடு, கர்நாடகாவின் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்து தமிழர்களையும்,தமிழர் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
கலவரம் தொடர்ந்தால் இனியும் எங்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு ஜி. நாகராஜ் கூறியுள்ளார்.